Sunday, May 10, 2020

காதல் என்னும் அத்தியாயம் 4:

நண்பனிடம் விடைபெற்று பிரியாமல் பிரிந்து சென்றேன். இரவு phone செய்து அவன் ஊருக்கு கிளம்பியதை உறுதி செய்து கொண்டேன்.
வீட்டில் இரவு உணவு முடிந்தவுடன் ஊருக்கு செல்வது குறித்து அனைவரும் பேசி காலையில் செல்வது என ஒரு முடிவுக்கு வந்தோம். ஊருக்கு சென்று குறைந்தது நான்கு நாட்களாவது தங்க வேண்டி இருந்ததால் அதற்கான ஆயத்த பணிகளை அக்காவும் அம்மாவும் செய்து கொண்டிருந்தனர்.
எட்டு வருடம் கழித்து ஊருக்கு செல்வதால் உறவினர்களுக்கும் புத்தாடைகள் எடுக்கப்பட்டு இருந்தது அதனையும் பத்திரமாக எடுத்து வைக்கச் சொல்லி அம்மா அக்காவிடம் கூறினார். கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் தூங்க சென்று விட்டோம் ஆனால் எனக்கு மட்டும் தூக்கமே வரவில்லை. உருண்டு புரண்டு படுத்து பார்த்தேன் தூக்கம் வரவில்லை.
மனம் எதையோ யாரையோ நினைத்துக் கொண்டிருந்தது. பலரின் தனிமையை இனிமையாக்கும் அருமருந்து இசை. நான் என் சைனா செட்டில் headphone னை மாட்டி அதை காதுகளுக்கு பொருத்தினேன். அது குருவாயூரப்பா, குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி என்ற பாடலை ஒலித்தது. அப்பாடலை ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு எத்தனை தடவை கேட்டேன் என்று தெரியவில்லை காலையில் அக்கா வந்து எழுப்பிய போது தான் தெரியும் நான் தூங்கிப் போய் இருந்தேன் என்பது.
அனைவரும் குளித்துவிட்டு காலை டிபனை முடித்துக் கொண்டு கிளம்பினோம் திடீரென்று வெளியிலிருந்து வந்த அப்பா நாம் மகிழுந்தில் செல்கிறோம் என்றார். மகிழுந்து என்றவுடன் எனக்கும் அக்காவுக்கும் ஒரே மகிழ்ச்சி அம்மா மட்டும் பேருந்தில் போகலாமே எதற்கு செலவு என்றால்.
அப்பா ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். மகிழ்வுந்தில் எந்த மாற்றமும் இல்லாமல் பயணம் தொடங்கியது. பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் அத்தையிடம் இருந்து phone வந்தது. எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார் நான் அதையே அப்பாவிடம் கேட்டு முக்கால் மணி நேரம் ஆகும் என்று கூறிவிட்டு phone னை கட் செய்து விட்டேன்.
மகிழுந்து வீட்டின் அருகில் சென்று நின்றவுடன் என் தேவதை குடியிருந்த கோயில் வந்து எங்களை வரவேற்றது. என்னது கோயிலா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அதாங்க என் அத்தையை சொன்னேன். சிறிது நேரத்தில் வீட்டின் அருகில் பெரும் கூட்டமே கூடிவிட்டது. உறவினர், அண்டைவீட்டார், பக்கத்து தெரு வினர் என்று அனைவரும் வந்து நலம் விசாரித்து சென்றனர்.
கூட்டத்தில் என் நிலைமை படுமோசம் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று பலரும் என்னிடம் அவர்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அதில் சிலர் நான் யார் என்று கேட்டு என்னை test செய்து கொண்டார்கள். பெரும்பாலும் என்னைப் போன்றவர்கள் இதனை விரும்புவதில்லை.
இதுபோன்ற நேரங்களில் கோபம் தான் வரும் பாவம்! இது அவர்களுக்கு எப்படி புரியும். எல்லா பார்வையற்றோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவர்கள் எங்களுக்கு தந்த வரவேற்பு நாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தது போன்ற பிம்பத்தை எனக்கு ஏற்படுத்தியது. உண்மை தான் தமிழகத்தின் பல கிராமங்களில் இருக்கும் சிலருக்கு சென்னையும் வெளிநாடு போன்றதுதான். இன்று வரை அவர்களுக்கு சென்னை என்பது கனவாகவே இருக்கிறது. சிலருடைய பிள்ளைகள் மேற்படிப்பிற்காக சென்னைக்கு வந்து இருக்கலாம், சில பெண்களுடைய கணவர்கள் கட்டுமான பணிகளுக்காக சென்னைக்கு வந்து இருக்கலாம், சிலர் குடும்பத்தோடு இடம் பெயர்ந்திருக்கலாம் இவ்வாறு வந்தவர்களில் சிலருடைய உறவினர்கள் அவர்களை பார்க்க வந்து இருக்கலாம்.
பலர் வருவதில்லை காரணம் அவர்களுடைய ஏழ்மை. இதனைப் படித்துக் கொண்டிருக்கும் சிலர் மேற்கூறியவற்றை மறுக்கலாம் எப்படியாக இருப்பினும் அதுதான் நிதர்சனமான உண்மை.
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெழும்பு, கிராமங்கள் சுயராஜ்யம் பெற வேண்டும் என்று தேசத்தந்தை காந்தியடிகள் போன்றவர்கள் கூறியிருக்கின்றார்கள். தற்பொழுது நம்மை ஆண்டு வரும் பல தந்தைகள் கிராமங்கள் என்பதையே மறந்து விட்டனர். சரி, சரி கொஞ்சம் over ராக பொங்கி விட்டேன். சமூகத்தை விடுவோம் என் சங்கதிக்கு வருவோம். நலம் விசாரிக்க வந்த அனைவரும் சென்றபிறகு என் தாத்தா என்னை அழைத்து அவர் அமர்ந்திருந்த கயிற்றுக்கட்டிலில் அருகில் அமர்த்திக் கொண்டார். என் கையை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தார் அவர் அழுவதை பார்த்து மற்றவர்களும் அழுதனர் என் கண்கள் கூட ஓரிரு துளிகளை உதித்தது.
அப்பாவுடன் பிறந்த அனைவருக்கும் பெண்குழந்தைகள் மட்டுமே நான் ஒருவன் மட்டுமே அனைவருக்கும் ஆண் குழந்தை அதனால் அனைவருக்கும் என் மீது பாசம் அதிகம். தாத்தாவின் பாசத்திற்கு அதுவும் ஒரு காரணம் உறவு புதுப்பிக்கப்பட்டது தாத்தாவிற்கு மகிழ்ச்சி.
என் கிராமத்தையும் தாத்தாவையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். எங்கள் கிராமத்தில் மரியாதைக்குரிய நான்கைந்து குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. ஊரில் உள்ள நாட்டாமை களில் தாத்தாவும் ஒருவர்.
கிராமம் பல கட்டுப்பாடுகளை கொண்டது கலப்பு திருமணம் ஏற்றுக்கொள்ளப்படாது. சாதி என்பது இங்குள்ளவர்களின் உதிரத்தில் உதித்தது காதல் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படாது அதுவும் வேற்று சாதியினர் என்றால் சொல்லவே தேவையில்லை.
தவறு செய்பவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, அபராதமாக ஒரு தொகையை விதிப்பது போன்றவை தண்டனை முறைகளாக இருக்கின்றன. சில தவறுகளுக்கு இரண்டு தண்டனைகளும் ஒன்றாக விதிக்கப்படலாம்.
மரத்தடியில் அமர்ந்து தாத்தா கூறும் தீர்ப்புகளை கேட்பதற்கு ஊர் மக்கள் ஆர்வமுடன் கூடுவதை பெற்றோர் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் நான் இது போன்ற விஷயங்களை விரும்புவதில்லை.
ஆனால் என்னுடைய காதலுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதில் மகிழ்ச்சி. சரி வீட்டிற்கு வருவோம் வீட்டில் சென்டிமெண்ட் முடிந்து மதிய உணவும் அறுசுவையோடு முடிந்தது.
மாலை 5 மணிக்கு நான் மொட்டை மாடிக்கு சென்றேன். என் நண்பனை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அவனுக்கு நாட் ரீச்சபிள் என்று வரும்பொழுதே என்னை ஒரு கொலுசின் ஓசை ரீச் செய்து கொண்டிருந்தது. அவள்தான், அவளேதான் என் அருகில் வந்து என் கைவிரல்களை பிடித்துக்கொண்டே நல்லா இருக்கியா என்றாள்.
நான் பதிலேதும் கூறாமல் மௌனமாய் என் போனை எடுத்து அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே என்ற பாடலை சத்தமாக ஓட விட்டேன். அதற்கு பரிசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது. தொடரும்

4 comments:

  1. Replies
    1. வணக்கம் நண்பரே மீண்டும் உங்கள் ஆதரவுக்கு நன்றி நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா ஆவலாக உள்ளேன் உங்களது பெயர் அடுத்த ஆதரவில் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்

      Delete
  2. வணக்கம் தோழரே அருமை அருமை அதிலும் இந்த அத்தியாயத்தின் இறுதி மிகவும் அருமையாக இருந்தது நண்பரே இப்படிக்கு உங்கள் நண்பன் ராஜேஷ் வாழ்க வளர்க அருமை

    ReplyDelete
  3. அந்தகர்கள் காதலிப்பார்கள் என்பதை அவர்களது சொந்த பந்தங்களே விந்தையாய்ப் பார்க்கும்போது, காதல் என்பது மந்திரமோ! தந்திரமோ இல்லை என்பதை சந்தேகமின்றி அவர்போன்ற பிறரது சிந்தைக்கும் உரைக்கும்படியாக இக்கதை அமையும் என நினைக்கிறேன். தொடரட்டும் நண்பரே...

    ReplyDelete