Friday, June 26, 2020

காதல் என்னும் அத்தியாயம் 9

மனதிற்குள் அவளை திட்டிய நான் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நான் என்ன நினைக்கிறேன் என்று உனக்கு தெரியாதா? என்றேன். தெரியும் ஆனால், என்று அவள் இழுத்தாள். வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தம் என்னை ஏதோ செய்தது.
மனம் பதறிப்போய் பலவற்றை யோசிக்க இதயம் இக்கணமே துடிப்பை நிறுத்தி விடவா? என்றது. மறுகணமே முடிவை மாற்றிக்கொண்டு இல்லை, இல்லை நான் துடிப்பதே அவளுக்காக தான் அவள் சொல்லட்டும் துடிக்கவா அல்லது துடிப்பை துண்டிக்க வா என்று.
என்று தனக்குள்ளே பேசிக் கொண்டது. மேலும் என் இதயத்தை இன்னலுக்கு உள்ளாக்க விரும்பாமல் நானே தொடர்ந்தேன். தாத்தா கூறியது நடந்தால்அது தான் இந்த ஜென்மத்தில் நான் செய்த பாக்கியம் என்றேன்.
என்ன உனக்கு அவ்வளவு பிடிக்குமா? என்று அவள் உதட்டில் இருந்து உதிர்த்த வார்த்தைகள் எனக்குள்ளே ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்தியது.
அம்மா, அக்கா ஆகிய இருவருக்கு பிறகு எனக்கு ரொம்ப பிடித்த பெண் நீதான். காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது.
காரணமே இல்லாமல் வருவதற்குப் பெயர் தான் காதல் என்றால் இதுக்கும் அதுதான் பேரு. அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நெருக்கத்தொடு உருக்கம், பேசும் நேரம் தவறினால் தவிப்பு, நெஞ்சமெல்லாம் அதே நினைப்பு இவை யாவும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கிடைப்பது.
அந்த ஒருவர் பெற்ற தாய், பேணி வளர்க்கும் தந்தை, உடன்பிறப்பு, உற்றார் உறவினர், உயிர் கொடுக்கும் நட்பு இப்படி யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் தாய் தனக்கு கிடைக்காத ஒன்றை கூட தன் குழந்தைக்கு முழுமையாக கொடுப்பவள்.
தந்தையும் அதற்கு சளைத்தவரல்ல. இருப்பினும் தாய் முதன்மை பெறுகிறார். தந்தை கொடுக்கும் ஒரு அணுவை தனக்குள் வாங்கி அதனை அணுகுண்டு ஆக்கி அடைகாத்து உடல் கொடுத்து உயிர் கொடுத்து உலகிற்கு தருவிக்கும் தாய் முதன்மை பெறுவதில் தவறு ஒன்றும் இல்லை அல்லவா?.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். என்னை பொருத்தவரை மாதா, பிதா, நட்பு, தாரம் அதாவது மனைவி என்ற வரிசையே சரியானது. இந்த வரிசையில் நான் தாயின் உருவத்தில் தெய்வத்தையும் தந்தையின் அறிவில் ஆசானையும் காண்பதால் குருவும் தெய்வமும் தவிர்க்க படவில்லை முதன்மை படுத்தப்படுகிறார்கள்.
கண்ணதாசன் வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, என்று கூறிவிட்டு கடைசி வரை யாரோ? என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார்.
அதற்கு என்னிடம் உள்ள பதில் நட்பு. உண்மையான நட்பு, ஆபத்தில் உதவும் நட்பு, உயிரைக் கொடுக்கும் நட்பு, தன்னலமற்ற நட்பு கடைசி வரை இருக்கும். நட்பு பள்ளிப்பருவ நட்பு, கல்லூரியில் கிடைக்கும் நட்பு, வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் நட்பு, நாம் செய்யும் business மூலம் கிடைக்கும் நட்பு என்று பல பரிமாணங்களைக் கொண்டது.
சுருக்கமாக சொன்னால் புதிதாக கிடைக்கும் முன் பின் தெரியாத ஒருவருடைய அறிமுகம் today onwards we are friends என்பதிலேயே முடியும். ஒரு படி மேலே போய் சொன்னால் நாம் காதலிப்பவர்களை கூட வீட்டில் நண்பர்களாகத்தான் அறிமுகப்படுத்துவோம். இப்படிப்பட்ட நட்பு கடைசிவரை இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அடுத்து மனைவி நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் உறவு இடையில் வருவது. பெற்றோர்களுக்கு பிள்ளை என்பது இடையில் வந்த உறவு, இது கணவன்,, மனைவி, பிள்ளை என தொடர நாம் வளர்ந்து சமூகத்தில் வாழத் தொடங்கும் பொழுது மற்றவர்களும் சேர்ந்து கொள்கின்றன.
இந்த உறவுகளுக்கு licence எதுவும் கிடையாது. இடையில் வந்தது தடையில் முடியலாம். ஆனால், மனைவி நம்மிடம் தாலி எனும் licence சை வாங்கிக்கொண்டு இடைவெளியில்லாமல் நம்மோடு வாழ்பவள்.
தாய்க்கு அடுத்தபடி நம் வாழ்வின் பாரத்தை பகிர்ந்துகொள்ளும் தாரம், இறைவன் கொடுத்த ஒரு வரம்!. நீ ஏன்? எனக்கு அந்த வரமாக இருக்கக்கூடாது என்றேன்.
உடனே அவள் எனக்கு உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு நான் இன்னும் உன் வாழ்வில் வரவே இல்லை ஆனால் இப்பொழுதே என் மீது உனக்கு இவ்வளவு பாசம் இன்னைக்கு எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடைந்துவிட்ட பேரானந்தம் என்றாள்.
சரி காயின் காலி ஆயிடுச்சு நாளைக்கு கால் பண்றேன் என்று கூறிவிட்டு காலை கட் செய்து விட்டாள்.
என்ன? காயினா ஆமாங்க என் காதலை வளர்த்தது one rupee coin box. எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் அவள் ஓகே சொன்னாளா? இல்லையா? என்று ஒரு டவுட்டூ.
நடந்ததைக் கூறி நண்பனிடம் கேட்டேன். மச்சி நீ பையன்டா open னா சொல்லிட்ட என்னதான் இருந்தாலும் அவளும் பெண் தானே! இந்த அச்சம், நானம், மடம், பயிர்ப்பு அதெல்லாம் இருக்க தானே செய்யும்.
மறைமுகமாகத்தான் சொல்லுவாங்க நம்ம தான் புரிஞ்சுக்கணும். நான் மீண்டும் ஒரு முறை மச்சி confirm தான? என்றேன். அதற்கு அவன் hundred percent success தான் என்றான்.
மச்சி இதை நம்ம celebrate பண்ணியே ஆகணும் டா night சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வாங்கட்டுமா? என்றான். நான்  எனக்கு chicken குழம்பு என்றேன். ஓகே உனக்கு மீன் குழம்பு பிடிக்காது என்று எனக்கு தெரியும். உனக்கு மட்டும் chicken குழம்பு வாங்க சொல்லி விடுறேன் என்றான்.
ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறவங்களுக்கு தெரியும் ஹாஸ்டல் சாப்பாடு எப்படினு எங்க ஹாஸ்டல் சாம்பாரையும் சைடிஷ் சையும் சமாளிக்க பெரும்பாலும் night சாப்பாட்டுக்கு ஹோட்டல்ல கொழம்பு வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
எப்போதாவது இட்லிக்கு வடகறி வாங்குவது உண்டு. இவ்வாறு வாங்கி சாப்பிடும் நண்பர்கள் குழுவில் ஐந்து பேர் நான்கு பேர் இருப்பார்கள் இவர்கள் turn அடிப்படையில் ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது ஒரு வாரத்திற்கு ஒருவர் என்று வாங்கி சாப்பிடுவார்கள்.
இதனை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பார்வையற்றவர்கள் எப்படி வெளியில் சென்று ஓட்டலில் வாங்கி வருவார்கள் என்ற சந்தேகம் ஏற்படலாம். பார்வையற்றவர்களில் முழு பார்வையற்றோர் குறை பார்வை உடையோர் என்று இரண்டு பிரிவினர் உண்டு.
பெரும்பாலும் வெளியில் செல்லும்பொழுது குறை பார்வை உடையோர் முற்றிலும் பார்வை இழந்தவருக்கு உதவியாக செல்வார்கள். அப்படியில்லையென்றால் ஊன்றுகோலை பயன்படுத்துவார்கள். பழகிய இடங்களில் முற்றிலும் பார்வையற்றோருக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது.
எங்கள் ஹாஸ்டலை சுற்றியுள்ள இடங்கள் பழகி இருந்ததால் நாங்களே வெளியில் சென்று எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து விடுவோம்.
நாங்கள் வழக்கமாக குழம்பு வாங்கும் கடையை நடத்துபவர் பெயர் செல்வம் அவர் எங்களோடு நன்றாக பழகுவார். இரவில் எவ்வளவு லேட்டாக சென்றாலும் எங்களுக்காக காத்திருந்து நாங்கள் வாங்கிய பிறகே கடையை அடைத்து விட்டு செல்வார்.
மதிய உணவுக்காக வைக்கப்படும் குழம்பு சில நேரங்களில் மீந்துவிடும் அதனை வீணாக்க விரும்பாதவர்கள் இப்படி காசாக்கி விடுவார்கள். நேரம் கடந்து சாப்பிடும் மீன் குழம்பிற்கு ருசி அதிகம் என்பார்கள்.
ருசியான குழம்புடன் இரவு உணவு நன்றாக முடிந்தது. மாலை நானும் அவளும் பேசிக்கொண்டதை நண்பனிடம் கூறிக்கொண்டே அவள் நினைவில் நிம்மதியாக உறங்கி விட்டேன். தொடரும், 1 of 2, In list, 2,  items

Friday, June 12, 2020

காதல் என்னும் அத்தியாயம் 8

உறவு! உலகில் வாழும் உயிர்களுக்கு கிடைத்த பொதுவான வரவு. உதிரத்தில் பூத்த உயிர்கள் மட்டுமே உறவாக கருதிய காலம் போய் உறவை விஞ்சிய உயிர்கள் இல்லை என்றாகிவிட்டது. தாயின் கருவறை தொடங்கி கல்லறை வரை பல்வேறு பரிணாமங்களை பெற்று நம்மோடு பயணிக்கின்றது.
ஆண் பெண் என்று பொதுவாக தோன்றிய உயிர்கள் கணவன் மனைவி, தாத்தா பாட்டி, தாய் தந்தை, மகன் மகள், அக்கா தங்கை, அண்ணன் தம்பி, அத்தை மாமா, போன்ற ரத்த உறவுகளோடு நில்லாமல் காலத்தின் பரிணாம வளர்ச்சியால் மற்ற உறவுகளையும் சேர்த்துக்கொண்டது. இதில் முதன்மை பெறுவது மருமகன் மருமகள் இவர்கள் ரத்த உறவாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.
நாம் உறவின் உன்னதத்தில் இருந்து விலகி நீண்ட நாள் ஆகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் கூட்டுக்குடும்பம் குறுகி தனிக்குடும்பம் ஆனதே. இப்பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் தந்தை உடன்பிறப்பு தவிர மற்ற உறவுகள் தெரிவதில்லை காரணம் அவர்கள் குறுகிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகும். பெற்ற குழந்தைகளை பேணிக்காக்க பேயாய் அலைந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளோடு கொஞ்சுவதற்கு கூட நேரமில்லை.
தாய்ப்பால் புட்டிபால் ஆகிவிட்டது.
வேலைக்காரி நிரந்தர தாயாகி விட்டாள். இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு அதாவது பெற்றோர்கள் வேலைக்கு சென்று வரும் வரை குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு குழந்தைகள் பராமரிப்பகம் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இத்தகைய சூழலில் வளர்ந்து வருபவர்கள் அன்பு, பாசம் போன்றவற்றை மற்றவர் இடத்தில் எதிர்பார்க்கிறார்கள்.
அதனை கொடுக்க தயாராக இருப்பவர்களை புதிய உறவுகளாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு பூக்கும் உறவுகளே காதல், நட்பு போன்றவையாகும். இவற்றால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.
உடைந்த கண்ணாடி துகள்களை கொண்டு மீண்டும் புதியதோர் கண்ணாடியை செய்து விடலாம். அது போலத்தான் உறவுகளும் உடைந்தால் ஒட்ட வைத்து விடலாம். ஆனால், ஒட்டியதை உடையாமல் பார்த்துக் கொள்வதுதான் கஷ்டம். அதைத்தான் தாத்தா என் பெற்றோரிடமும் அத்தையிடமும் கூறிக்கொண்டிருந்தார்.
நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் ஒட்டிய எங்கள் உறவை உடையாமல் நீட்டிக்க அவர் சொன்ன ஐடியா தான் என் மகிழ்ச்சிக்கு காரணம். அவர் சொன்ன அந்த ஐடியாவருங்காலத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது. அதனைக் கேட்ட என் பெற்றோரும் அத்தையும் குழந்தைகளின் படிப்பு முடியட்டும் அதன் பிறகு இதை பற்றி யோசிக்கலாம் என்றனர்.
அவர்கள் கூறிய பிறகு என்பதன் அர்த்தம் நீண்ட நாளைக்கு பிறகு தான் எனக்கு புரிந்தது. என்னவளுக்கு இதயத்தில் கட்டிய காதல் கோட்டைக்கு அதுவரை கடகால் மட்டுமே போடப்பட்டிருந்தது. தாத்தா கூறிய வார்த்தைகளால் கோட்டை குபீரென எழுந்து வசந்தமாளிகை க்கும் தாஜ்மஹாலுக்கும் இடையே ஒரு வடிவம் கொண்டு நின்றது.
அந்த நொடி முதல் அவளை என் காதல் கோட்டைக்குள் குடி ஏற்றிவிட்டு அவளோடு சேர்ந்து வாழ தொடங்கிவிட்டேன். தாத்தாவிடம் பேசி முடித்த பிறகு ஊருக்கு கிளம்பி விட்டோம். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை என் நண்பனிடம் ஃபோனில் கூறினேன்.
அதை கேட்ட அவனுக்கு அவன் காதல் கை கூடியது போல அப்படி ஒரு மகிழ்ச்சி. மச்சி treat வை டா என்றான். நாளைக்கு school ளுக்கு போறோம் இல்ல அப்ப பாத்துக்கலாம் என்றேன்.
School ளுக்கு போனேன்னு தான் பேரு படிப்பில் நாட்டமில்லை, பசி எடுத்தும் சாப்பாட்டில் ருசி இல்லை,, தண்ணீர் இருந்தும் தாகம் இல்லை, விளையாட்டின் மீது மோகம் இல்லை, இரவை கடந்தும் உறக்கமில்லை, பகலுக்கு கூட என்மேல் இரக்கம் இல்லை.
எப்பொழுதும் ஒரே நினைவு எதிர்கால வாழ்வின் கற்பனைக் கனவு. விழித்துக்கொண்டு நான் காணும் கனவிற்கு ஒருபொழுதும் உறக்கம் வந்ததே இல்லை. தனிமை வாட்டிய போதெல்லாம் ஆறுதலாய் அருகில் நண்பன். நட்பு எனும் விழுது இல்லாவிட்டால் பலருடைய வாழ்வில் காதல் என்னும் மரம் செழித்து வளர்வதற்கு வாய்ப்பே இல்லை.
காதல் என்றாலே அதற்கு பல, வண்ண சாயங்கள் பூசி கைகழுவும் உறவுகள் மத்தியில் இரு கரங்கள் இணைய ஒரு குடையின் கீழ் பூக்கும் ஓராயிரம் பூக்களே நட்பு.
அத்தகைய நட்பை நான் பெற்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு நாள் என் ஏக்கத்தீயைய் அணைக்க அவளிடமிருந்து போன் கால் வந்தது. ஆனால், அதிர்ஷ்டம் இல்லாத நான் அந்த போன்காலை மிஸ் செய்து விட்டேன். நான் என் போனை சார்ஜ் போடுவதற்காக என் நண்பனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டேன். எங்கு போய் இருந்தேன் என்பது எனக்கு சரிவர நினைவில்லை.
போனை அட்டெண்ட் செய்து பேசிய என் நண்பன் அதை என்னிடம் கொடுக்க பல இடங்களில் என்னைத் தேடி பார்த்து இருக்கிறான்.. அவனுக்கும் நான் எங்கே சென்று இருந்தேன் என்பது தெரியாது. வேறு வழி இல்லாமல் விஷயத்தை. அவளிடம் கூறினான். ஆசை, ஆசையாய் என்னிடம் பேச போன் செய்து இருந்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நண்பன் கூறியதை கேட்ட அவள்  அண்ணா நாளைக்கு இதே டைமுக்கு நான் போன் பண்ணுவேன்னு அவன் கிட்ட சொல்லிடுங்க என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள்.
மேலே கூறிய அனைத்தும் நான் திரும்ப வந்தவுடன் என் நண்பன் என்னிடம் கூறியது.. என் மீது எனக்கே கோபம் வந்தது. கடவுளைக் கூட திட்ட தோன்றியது. என்நிலை அறிந்து நண்பன் வருத்தப்பட்டான். கடைசியில் அவனை நான் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு முறையும் நாம் தவறவிடும் ஏதோ ஒரு விஷயம் நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்த முயற்சிக்கிறது. அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது, சிலருக்கு இன்பத்தையும் பலருக்கு துன்பத்தையும் தரலாம். இன்பதுன்ப வரவுகள் அதிர்ஷ்டசாலிகளை பொருத்தது.
நீண்டநாள் ஏக்கத்தோடு காத்திருந்த நான் அவள் சொன்ன அந்த time காக காத்திருந்தேன். அந்த time மும் வந்தது அவளிடமிருந்து phone னும் வந்தது. hello என்று அவள் குரலை கேட்டால் ஆகாயத்திலிருந்து ஆண்டவன் கூட வழுக்கி விழுந்து விடுவான். அவனே அப்படின்னா அற்ப மனிதன் நான் வழுக்காமலே விழுந்துவிட்டேன்.
நானும் hello என்றேன். நல்லா இருக்கியா, சாப்பிட்டியா, வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க, படிப்பு எப்படி போகுது இவை அனைத்தும் நாங்கள் மாற்றி, மாற்றி ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்ட கேள்விகளாகும்.
அதன் பிறகு என்ன பேசுவதென்றே இருவருக்கும் தெரியவில்லை. மீண்டும் நானே ஆரம்பித்தேன். தாத்தா கூறியதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்றேன். அவள் அதற்கு தாத்தா என்ன கூறினார்? என்று கேட்டுவிட்டு சிரித்தாள்.
அவள் சிரிப்பு எனக்கு வெறுப்பாக இருந்தாலும் நான் மௌனமாக இருந்தேன். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவள் நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டாள். கள்ளி தெரிந்துகொண்டே நடிக்கிறாள் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டேன். தொடரும், Edit box, 1 of,  2